ரகசியமாய் மூன்று விஷயங்கள்…
Posted by Stella on June 6, 2008
மூன்று முக்கியமான விஷயங்களை படு ரகசியமாய் செய்யுங்கள் என கிறிஸ்தவம் போதிக்கிறது. ரகசியமாய் செய்யும் இந்த செயல்களே நமது விசுவாசத்தின் ஆழத்தை நிறுத்துப் பார்க்கும் அளவைகளாகவும் இருக்கின்றன என்கிறது கிறிஸ்தவம்.
அப்படியென்ன மூன்று விஷயங்கள்.
1. செபம் : செபிக்கும்போது ரகசியமாய் செபியுங்கள் என்கிறார் இயேசு. காரணம் அன்றைய சமூகத்தில் ஆன்மீகவாதிகள் என சொல்லிக் கொண்டவர்கள் தெரு முனைகளில் நின்று கத்தி கூச்சலிடுவதையே வழக்கமாய் கொண்டிருந்தார்கள். அதுவே இறைவன் விரும்புவது என தங்களுக்குள்ளேயே நினைத்துக் கொண்டார்கள்.
அவர்களுடைய எதிர்பார்ப்பு, தான் மிகப்பெரிய ஆன்மீக வாதி என மக்கள் கருத வேண்டும் என்பதும் அதற்குரிய மரியாதையையும், வணக்கத்தையும் மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே.
இயேசு சொன்னார், செபிக்கும்போது கதவைத் தாழிட்டு விண்ணகத் தந்தையிடம் செபம் செய். மறைவாய் இருக்கும் செபமே இறைவனுக்கு நிறைவாய் இருக்கும் செபம். எனவே மனதைத் திற கதவைப் பூட்டு. இதுவே செபிக்கும் வழி. என்றார் இயேசு.
நமக்குத் தேவை மனிதரின் மரியாதையா, இறைவனின் இணையற்ற கருணையா ?
மனிதனின் அங்கீகாரமெனில் வித விதமான அங்கிகளுடன் வீதிகளில் கூச்சலிடலாம். இறைவனின் இரக்கமெனில் அடைபட்ட அறைகளில் மனதைத் திறக்கலாம்.
2. நோன்பு : நோன்பு இருக்கும் போது யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார் இயேசு.
நான் நோன்பு இருக்கிறேன் என பறைசாற்றி மனிதனின் மரியாதையைப் பெற்றீர்களெனில் உங்களுக்கு இறைவனிடம் எந்த பலனும் இல்லை. உங்கள் நோன்பும் வீண். என்பதே இயேசுவின் தெளிவான போதனை.
இயேசு நோன்பைக் குறித்து ஒரே ஒரு கட்டளை மட்டுமே கொடுத்திருக்கிறார். அதாவது “நோன்பு இருக்கும் போது பிறருக்குத் தெரியப்படுத்தாதே”.
நாம் எப்படி இருக்கிறோம் ? நாளைக்கு ஃபாஸ்டிங் பிரேயர் என தம்பட்டம் அடிக்கிறோமா ? வெள்ளிக்கிழமை நான் சாப்பிடறதில்லை என பறை சாற்றித் திரிகிறோமா ?
மனுமகன் மறைந்தபின் சீடர்கள் நோன்பு இருப்பார்கள் என இயேசு நாம் நோன்பு இருக்க வேண்டும் என்பதைப் பேசுகிறார். எனவே நோன்பு இருப்பது அவசியமானதே. அதுவே உடல் நமக்குக் கட்டுப்பட்டிருக்கிறதா உடலுக்கு நாம் கட்டுப்பட்டிருக்கிறோமா என்பதைக் கண்டறியும் வழியும் கூட.
ஆனால் அதை நமக்கும் இறைவனுக்குமான ஒரு உடன்படிக்கையாய் வைத்துக் கொள்வோம்
அடுத்த முறை நோன்பு இருக்கும் போது நோயில் இருப்பது போல காட்டிக் கொள்ளாதிருப்போம். உண்ணா நிலை இறைவனின் விண்ணகக் கதவைத் திறக்கட்டும், மனிதனின் பாராட்டுச் சன்னலை திறக்க வேண்டாம்.
3. உதவி : பிறருக்கு உதவி செய்யும் போது யாருக்கும் சொல்ல வேண்டாம் என்பது இயேசுவின் கட்டளை. “வலது கை செய்வதை இடது கை அறிய வேண்டாம்” என்கிறார் அவர்.
ஒருவருக்கு ஒரு தேவையெனில் யாருக்கும் தெரியாமல் சென்று அவருக்கு உதவவேண்டும். அப்போது தான் இறைவனின் அருள் நமக்குக் கிடைக்கும்.
மனிதனிடம் விளம்பரம் செய்து விட்டு உதவிகளை வழங்கினால் விண்ணக வரம் இல்லை என்பதை இயேசு தெளிவாகவே சொல்லியிருக்கிறார்.
சகோதரர் சேக் பூனன் சபையினர், தனது சபை மக்கள் யாருக்கேனும் தேவை இருக்கிறது என்பதை அறிந்தால், உதவி தேவைப்படும் அந்த நபருக்குக் கூட தெரியாமல் அவருக்கு உதவுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார். இதுவே இயேசு போதித்த உதவும் வழி.
மனிதனின் கை தட்டலா, விண்ணக நிலை எட்டலா ? எது தேவை என்பதை தீர்மானிக்க வேண்டியது நாமே !
இந்த மூன்றுமே இரகசியமாய் செய்ய வேண்டுமென இயேசு சொன்னவை.
இன்றைய கிறிஸ்தவம் இந்த மூன்றையும் செய்கிறதா என்பது முதல் கேள்வி.
செய்ய வேண்டிய விதத்தில் செய்கிறதா என்பது இரண்டாவது கேள்வி.
நம்மை நாமே படிப்போம். இயேசுவின் உரைப்படி நடப்போம்.

lilly said
pray for me & My future
தேவராஜ் said
சகோதரி ஸ்டெல்லா,
இரகசியமாய் செய்ய வேண்டிய விசயத்தை, இரகசியமாய் விட்டு விட்டேனா என நின்று ஒரு ஆன்ம சோதனை செய்ய வைத்தது உங்கள் பதிவு.
நன்றி, உங்களுக்கும், இறைவனுக்கும்.
marcus said
i wish to know more message like this in tamil.please send to my email daily.